Friday 17 April 2015

ஜாமின் நீடிப்பு கிடைக்குமா

     சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரின் ஜாமின் மனுக்கள், தலைமை நீதிபதி, 'பெஞ்ச்' முன், இன்று விசாரணைக்கு வருகின்றன. இவர்களுக்கு, ஜாமின் நீடிப்பு கிடைக்குமா என்பது இன்று தெரியும்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, பெங்களூரு தனி நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நான்கு பேரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் ஜாமின் மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நான்கு பேருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான, 'பெஞ்ச்', ஜாமின் வழங்கியது. 

நால்வருக்கும் ஜாமின்:

கடந்த ஆண்டு, அக்டோபர், 17ம் தேதி, நால்வருக்கும், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பின், டிசம்பரில், ஜாமின் நீட்டிக்கப்பட்டது. ஜாமின் பெற்று, சென்னை திரும்பிய ஜெயலலிதா, பொது நிகழ்ச்சி எதிலும், இதுவரை கலந்து கொள்ளவில்லை. ஜாமின் 
மனுக்களை விசாரித்த, உச்ச நீதிமன்றம், இவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை, மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்கவும், கர்நாடகா உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், ஜெயலலிதா தரப்புக்கு உத்தரவிட்டது.




ஆவணங்கள் தாக்கல்:

அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பில், வேக வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தனி நீதிமன்ற தீர்ப்பின் நகல்கள், வழக்கு ஆவணங்கள் எல்லாம் தயார் செய்யப்பட்டு, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தபடி, மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை, ஜன., 2ம் தேதி, நீதிபதி குமாரசாமி துவக்கினார். மார்ச், 11ம் தேதி விசாரணையை முடித்து, தீர்ப்பு தேதியை தள்ளி வைத்தார். இந்நிலையில் தான், அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனத்தை எதிர்த்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மனு தாக்கல் செய்த வழக்கில், உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது. இதனால், இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' விசாரணைக்கு செல்கிறது. இந்த 'பெஞ்ச்' அளிக்கும் உத்தரவைப் பொறுத்து, மேல்முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை நிலை என்ன என்பது தெரியும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான, 'பெஞ்ச்' முன், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமின் மனுக்களும், இன்று விசாரணைக்கு வருகின்றன. அப்போது, அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனம் தொடர்பான வழக்கை விசாரிக்க, மூன்று நீதிபதிகளை நியமிக்கும்படி, கோரிக்கை எழ வாய்ப்பு உள்ளது.

பிரச்னை இருக்காது:

ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளதால், ஜாமின் நீடிப்பில் எந்த பிரச்னையும் இருக்காது என்றே கூறப்படுகிறது. இதற்கிடையில், ஜாமின் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக, அறிவித்துள்ளார். இந்நிலையில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்ட ஜெ., வழக்கு, 21 ம் தேதி விசாரிக்கப்படுகிறது.

No comments: